Monday, April 23, 2007

சிறிலங்கா கூட்டுப் படைத் தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு அழிப்பு-

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டது. 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன. பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன. இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப் படைத்துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட போது பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகள் கேட்டதனையும், தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும் செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது: பலாலி வான்படைத்தளம் மற்றும் இராணுவக் களஞ்சியம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக எமது தளத்துக்குத் திரும்பியுள்ளனர். இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த வானூர்தியில் இருந்த எமது வானோடி ஒருவரை தொடர்பு கொண்டபோது பலாலித் தளம் தீப்பற்றி எரிந்தததை தாம் பார்த்ததாகக் கூறினார். இத்தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பான ஊடக மையத்தின் பேச்சாளர் கூறியதாவது: எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர் துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும், அவர்கள் இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ள செய்தி: பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்தி உள்நுழைய முயன்றது. அதனை இராணுவத்தினர் முறியடித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து அந்த வானூர்திகள், பலாலிக்கு வந்தன. பாதுகாப்பு எச்சரிக்கை சாதனங்கள் உடனே இயக்கப்பட்டன. தாக்குதல் வானூர்திகளை நோக்கி வானூர்தி எதிர்ப்பு தளபாடங்கள் நிறுத்தப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல் ஏதும் நடத்தாமல் தாக்குதல் வானூர்தி திரும்பியுள்ளது. இருப்பினும் திரும்பிச் செல்லுகையில் மயிலிட்டி கடற்பரப்பில் வெடிபொருட்களை வீசிச் சென்றுள்ளனர். இதனிடையே பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம், முதன்மை இராணுவ மருத்துவமனை, கவசப்படைப்பிரிவு மையம், உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா வான்படையினரின் வான் பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல் மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும். கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக் கூறிக் கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர். தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர். கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர். இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன. தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த இருள்வேளையில் இன்று குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றனர். தமிழீழ வான்படையினரின் இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காப் படையினர், தமது முன்னரங்க நிலைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிக் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். http://www.eelampage.com/?cn=31525

Saturday, December 24, 2005

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சென் மேரீஸ் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது. நன்றி: புதினம்

Wednesday, August 24, 2005

திரைகளில் பெண்கள் இன்னும் பண்டமாய்!

இந்த நூற்றாண்டில் ஊடகம் என்றவகையில் இணையம், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றோடு மக்களை அதிகமாக சென்றடைகின்ற இன்னொரு முக்கியமான ஊடகம் சினிமா. சின்னத்திரையும் சரி வெள்ளித்திரையும் சரி நிறையவே மக்களிடை ஆதிக்கம் செய்கின்றது. கிராமங்களில் கூட சினிமா திரையரங்குகள் இருக்கின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இந்த வெள்ளித்திரையில் அதாவது சினிமாவில் தங்கியிருக்கிறது. காமொடியாக, பாட்டாக , காட்டியாக பற்பல நிகழ்ச்சிகளை இந்த திரைப்படங்களை வைத்தே தாயாரித்து தங்கள் காலத்தை போக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. அதே போல தான் சின்னத்திரையும் நாடகம் போடதா ஒரு தொலைக்காட்சி நம்மவர்களிடையே தாக்குப்பிடிக்குமா என்றால் யோசிக்க வேண்டியவிடயம். இப்படி மக்களை பலவகையில் சென்றடைகின்ற ஊடகமான இந்த சினிமா பலர் பெண்களை நோக்கும் விதம் இன்னும் மாறுபடவில்லை? பல திரைப்படங்களில் பெண்கள் பற்றிய பழமையான கருத்தையே இன்னும் காணமுடிகிறது. கவர்ச்சிக்காக பெண்களைப்பயன்படுத்துவதும். பெண்களை பண்டமாக பார்ப்பதும் இன்னும் நின்றுவிடவில்லை. தமிழ்ச்சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனை மையமாக கொண்டு அவரது உதவியால் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கிறது போல தான் அனேக படங்கள் வெளிவருகின்றன. பெண்ளை மையமாக வைத்து அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்ற மாதிரி படங்கள் வரவில்லை என்று சொல்லவில்லை அப்படி வந்திருந்தாலும் குறைவு தான். அழகுக்காக ஒரு ஈர்ப்பிற்காக தான் அநேக படங்களில் பெண் நாயகிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதைப்போன்று தான் பாடங்களில் வருகின்ற காட்சிகளில் நாயகர்கள் சாதாரனமாக ஆடை அணிந்திருப்பார்கள். நாயகிகள் மட்டும் சில படங்களில் அரைகுறையாய் கவர்ச்சியாய் அணிந்திருப்பார்கள். இந்த நிலை ஏன் இன்னும்? அண்மையில் ஒருபடம் பார்க்ககிடைத்தது. அதில் நாயகனும் அவனது சகோதரனும் நாயகியைக்காதலிப்பார்கள். நாயகன் சகோதரனுக்காய் நாயகியை விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுக்கிறது பெரிய விடையமே இல்லைங்க. பாராட்டலாம் ஆனால், விட்டுக்கொடுப்பு அந்த பெண்ணின் சம்மதத்தோட நடக்கிறதா? என்றால் இல்லை. அவர் நினைச்சார் செய்யிறார். இதை விடக்கொடுமை என்ன என்றால் "நீ அவளை எடுத்துக்கோ" என்கிறார் நாயகன். பலமுறை இந்த சொற்றொடர் பாவிக்கப்பட்டது. பரிதாபமாக இருந்தது படத்தை பாக்க. பல படங்களில் இப்படிப்பட்ட வார்த்தைப்பிரயோகம் பெண்ணை நோக்கிப்பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் என்ன பண்டமா?? எடுத்துக்கோ வைச்சுக்கோ என்று கையைக்காட்டுவதற்கு? இப்படிப்பல படங்களில் இந்த வசனம் பார்க்ககூடியதாக இருந்தது, இருக்கிறது. அது நிற்க. சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பல சந்தர்ப்பங்களில். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது திருமணம் தான் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் திடிரென ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசிய கலியாணம் தடைப்பட்டுவிட்டால் பெண்ணின் தகப்பனார் செய்கின்ற முதல் வேலை. மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து என் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுங்கள். வாழ்க்கையை சீரழிச்சிடாதீங்க என்று புலம்பிற காட்சிகள் பல? ஏனைய்யா இந்த நிலமை? வாழ்க்கை என்றது திருமணமா? திருமணம் நடக்கவில்லை என்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிஞ்சிதா? ஏன் இப்படியான ஒரு மாயையினை அனேக காட்சிகளில் உருவாக்குகிறார்கள். இந்த படங்களில் வருகின்ற இன்னொரு விடயம் என்னவென்றால். நாயகன் அல்லது நாயகியை சார்ந்தவர்கள் அது தாயாக கூட இருக்கலாம் சொல்றது. "பொம்பளைமாதிரி அடக்க ஒடுக்கமாய் இரு"? அதென்னங்க பொம்பளை மாதிரி? புரியவே இல்லை. ஒரு படத்தில ஒரு றவுடி கலாட்டா செய்கிறார். அதால ஒரு சின்னப்பிள்ளை பாதிக்கப்படுறார். இதைப்பாத்த நாயகி கோவம் கொண்டு அந்த றவுடியை பேசிறாங்க. பொலிஸ் வர நாயகன் நாயகியையும் அழைத்துக்கொண்டு விலகிறார். அந்த அம்மா நடந்ததை பொலிஸிற்கு சொல்ல முற்படுறாங்க ஆனா அந்த நாயகன் விடல. அவர் சொல்றார். "பொம்பளை மாதிரி அடக்கி வாசி" என்ற தொனில அவங்களை பேசிறார்.? ஏன் இப்படிப்படைக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு பெண் நியாயத்தை கேட்கக்கூடாதா? ஏன் இப்படி பொம்பளை மாதிரியிரு. அடக்கி வாசி என்ற இந்த பதத்தை பாவிச்சு இன்னும் பிற்போக்கு வாதம் பேசி. பெண்களை முடக்கணும் என்று நினைக்கிறார்கள் என்பது வேதனையான விடயம். அப்படிப்பட்ட வசன நடைகளை கேட்டுவிட்டு இருக்க முடியல. இது ஒரு சில படங்களில் கண்டது தான். ஆனா இப்படி பல படங்களில் நடக்கிறது. பெண்கள் முன்னோக்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, பல வளர்ச்சியைக்கண்டு விட்ட இந்த காலத்தில ஏன் இப்படியான காட்சிகள் அமைக்கப்படுகின்றன? புரியவில்லை. என்று தான் இந்த எடுத்துக்கோ வைச்சுக்கோ என்ற நிலை மாறுமோ? எதிர்பார்த்தவண்ணம்.

Tuesday, August 16, 2005

Operation AMERICAN HIROSHIMA (ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா)

அல்கெய்டாவின் அடுத்த இலக்கு?? ரிசியின் புலனாய்வு அரசியல். http://www.tamilnaatham.com/audio/rishie/20050812.smil

Thursday, July 21, 2005

ஒன்பதாவது முடிச்சு!

"என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது.

ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள்.இத்தனைக்கும் யாழ்நகரில் எங்கையே ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இப்படி வாழும் ஒரு தமிழ்ப்பெண். பிறப்பில் கூட அவளிற்கு சோதனை தான். தாயையும் வீட்டில் நின்ற ஒரு பசுமாட்டையும் கொண்டு அவள் வெளியில் வந்தாள் என்று அடிக்கடி பேசுவார்களாம். ஆனந்தி பிறந்த போது வீட்டில் நின்ற பசுமாடும் பிரசவத்தில் தாயும் இறந்து போய்விட. "அவளிறக்கு தாயை விழுங்கியவள்" என்ற பட்டப்பெயர் கூடவே வந்து சேந்து விட்டது. சற்று வித்தியாசமானவளாக பார்க்கப்பட்டாள். தந்தைக்கு மனைவியாய் வீட்டிற்கு சித்திவர அவளது நிலை இன்னும் பாரதூரமானது. வெளியுலகம் வெறுமையாய் அவளிற்கு. வெளியிலே செல்ல தடை பாதி என்றால், போக்கிடம் தெரியாமல் வீட்டினிலே அடைபட்டது பாதி. காலங்கள் காத்திருக்கவில்லை பருவவயதை அடைந்து விட்டாள். "எவனை முழுங்க இவள் பெரிசானாளோ" தந்தையின் காதுப்பட சித்தி குத்திச்சென்றாள், தந்தை சித்திதாசனாய். தான் அப்படிப்பட்டவளா? அதிஸ்டம் இல்லாதவளா? என்ற ஏக்கம் அவளை ஆட்கொள்ள தவித்தாள். தனிமையில் எங்கோ ஒரு மூலையில் தவித்திட்டிருந்தவளை மச்சான் சீலன் ஆற்றினான். பருவமடைந்த புதிசு வேறை சீலனை கவர்ந்திழுத்திருக்கிறாள், இருவரும் காதல் கொண்டனர்.

ஆநாதரவாய் இருந்தவளிற்கு ஓரே ஒரு ஆதரவு சீலன் தான். சீலன் வேறு யாரும் அல்ல ஆனந்தியின் தாய் மாமன் மகன். சீலன் வீட்டில் கரையேற வேண்டிய இரண்டு பெண்கள் கரையேற்ற அவன் விலைமாடாய் நின்றான். அவனிற்கு அத்தனை விலை கொடுத்து ஆனந்திக்கு கணவனாக்க. ஆனந்திவீட்டில் வசதியும் இருக்கவில்லை மனமும் இருக்கவில்லை.

இளமை செய்த வேகம் ஒரு நாள் இருவரும் ஓடிச்சென்று விட்டார்கள். அதன் பின்ன அவளிற்கு "ஓடுகாலி" ஆனந்தி என்ற பெயர் தான் பிரபல்யமானது. இருவரது வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்ட புது ஜோடிகள். அருகிலேயே சீலனின் நண்பன் வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்தனர். கூலித்தொழில் தான் சீலன் செய்தான். அவள் சந்தோசமாய் வாழ்ந்தாள். குத்தல் இல்லை, நொட்டை இல்லை, சுதந்திரமாய் கால்வயிறு கஞ்சி கிடைச்சால் போதும் என்பது அவள் நிலை. காலம் கரைந்தோடியது, ஆனந்தி ஒரு குழந்தைக்கு தாயானாள் அவளது 19 தாவது வயசில். சீலன் வீட்டார் வலிய வந்து ஒட்டிக்கொண்டனர் பேரப்பிள்ளை என்ற சாட்டோடு. (அவர்களிற்கு அவன் தானே ஆதாயம்) ஆனந்திவீட்டார் ஒதுங்கியே இருந்தனர் ஓடுகாலி என்ற வெட்டோடு. (சீதனம் இன்னும் கொடுக்கப்படவில்லையே)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் எல்லாம் போயாச்சு. கலியாண வயசை தாண்டிய அக்கா. வயசை நெருங்கிய தங்கை. இருவரையும் காணுகையில் தான் செய்தது தப்பு என்று சீலனுக்கு புலப்படத்தொடங்கியது. வாய் வார்த்தையால் அவளை சாடத்தொடங்கியவன். சாட்டையால் அடிப்பது வரைக்கும் சென்று விட்டான். இரண்டொரு முறை அடிச்சு கலைச்சும் இருக்கிறான். தாய் வீடு என்று சென்றால் அங்கு தாய் இல்லை சித்திதாசன் தகப்பன், என்ன செய்யமுடியும்?. சுவரில் எறிந்த பந்து போல மீண்டும் அவனிடமே வந்து விடுவாள். இடர்களிற்கிடையில் இன்னொரு பெண் குழந்தை உலகை தொட்டுவிட்டாள்.

"அடி உதை பழகிவிட்டது, அடுப்பிற்கு வாழ்க்கைப்பட்டா நெருப்போடு வாழ்ந்து தானே ஆகவேணும்" அனுபவித்தாள். பிரச்சனை வேறுவிதமாய் சென்றது. வாடகைக்கு வீடு கொடுத்த நண்பன் சீவாவுடன் ஆனந்தியை தொடர்பு படுத்தி புதிய பிரச்சனையை தொடக்கிவிட்டான் சீலன். அதுவரை அப்படி ஒரு எண்ணமே அவளுள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவனது சித்திரவதையை தாங்கியதே அவளுக்கு வேலையாச்சு. சிவாவும், சீலணும் சிறுவயசு நண்பர்கள் ஒன்றாய் வேலைக்கு சென்று ஒன்றாய் வீடுவருவார்கள். இதற்குள் அவன் வீட்டை வந்து சென்றான் என்பான். இரவும் பகலும் வேதனை, சிவாவும் இதை தெரிந்தும் தெரியாததும் போல நடந்து கொண்டான். "இந்த தொல்லை வேண்டாம் நாங்கள் வீட்டை மாறுவம்" என்றவளை. "ஏன்டி அங்க எவனாவது இருக்கிறானா?" என்று உதைப்பான் , துடிதுடித்துப்போவாள். அவனது வீட்டில் இருந்தும் எந்த ஆதரவும் இல்லை. வேண்டா பெண்டாட்டி மட்டும் அல்ல அவள் வேண்டா மருமகளும் கூட.

அன்று அவளது வாழ்வில் பெரிய திருப்புமுனையாய் போனது, குழந்தைகளுடன் மாரடிச்சு ஒரு கறியும் சோறும் வைச்சிட்டு சீலன் என்ன இடியோட வாறானோ என்று ஏங்கிக்காத்திருந்தாள், அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. முழுவெறியோடு வந்து கறிச்சட்டியை தலையில் வைத்தான். வீட்டு மூலையினுள் போட்டு உதைத்தான். இன்னும் கொஞ்சம் ஏத்துவதற்காய் மீண்டும் வெளிக்கிட்டு போனான். அவன் செய்து விட்டு போன அபிசேகத்தை கழுவிவிட்டு அழுத குழந்தையை பால் கொடுத்து கிடத்திவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கி தலை விதியை நினைத்து அழுதவளை ஒரு கை தொட்டது. திடுக்கிட்டு எழுந்தாள்.

முன்னால் நிண்டது சிவா, "பயப்பிடாதேங்கோ இதுவரை உங்கட முகத்தை கூட நான் பாத்ததில்லை, ஆனா பிறந்த அவனுக்கு பிறந்த குழந்தையை கூட சந்தேகப்படுற அளவிற்கு சீலன் போட்டான், இனி இவனோட வாழ்ந்து என்னத்தை காணப்போறியள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னோட வாங்கோ, எங்கையாவது கண்காணத இடத்திற்கு கொண்டு போய் உங்கள கண்கலங்காமல் வைச்சுக்காப்பாத்திறன், இப்படி ஒரு எண்ணம் எனக்கு இதுவரை இருந்ததில்லை சோத்துப்பானை வெளியில வந்த வேகத்தில எட்டிப்பாத்தன் சுடுகறிச்சட்டி தலையில வந்ததை, அந்த கணம் எனக்கு இப்படி கேக்க தோன்றியது, தப்பிருந்தா மன்னிச்சுக்கொள்ளுங்கோ, உங்களுக்கு விருப்பம் என்றால் யோசிச்சு சொல்லுங்கோ, சத்தியமாய் இப்படி ஒரு இழிஞ்ச மனிசனாய் ஒரு நாள் கூட நான் இருக்கமாட்டன்". என்றான். சட்டென அந்த நொடி அவளிற்கு தோன்றியது. அவனோட போயிடணும் இந்த நரகத்தில இருந்து தப்பி ஓடவேணும் என்ற ஒரே நினைப்பு. "சரி நான் வாறன் இரண்டு குழந்தைகளையும் என்ன செய்யிறது" என்றவளுக்கு. "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அதுகளை தூக்கிட்டு வாங்கோ". ஒரு கணம் யோசிச்சவள். குழந்தையை விட்டிச்சென்றாள். அதுகள் அவனிற்கு தண்டனையாய் இருக்கவேணும் என்றதால்.

அவன் வரும் வரை ஒரு மறைவில் இருந்து பார்த்தவள் அவன் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு அகன்றே விட்டாள். கடைசியாக அந்த மண்ணை அவள் மிரிச்சது அன்று தான். அதன் பின் அவளது பிள்ளைகள் பற்றி அப்பப்ப தகவல்கள் அறிந்த வண்ணம் இருந்தாள். இப்ப அவர்கள் வளர்ந்து பெரிய ஆக்கள், சீலன் வெளிநாடு சென்று விட்டான். அவளை தேடவே இல்லை. அவளை ஓடுகாலி நடத்தை கெட்டவள் என்று பல பெயர் கொண்டு அழைத்தது ஊர். "தினம் தினம் சித்திரவதை செய்த போது யாருமே நெருங்கிப்பார்க்கவில்லை ஒரு வார்த்தை பேசவில்லை இப்ப எல்லாரும் கண்டபடி பேசிறார்கள்" என்று அவள் கதறி அழுதபோது நான் ஆடிப்போய் நின்றேன்.

இத்தோடு அவளது முதல் தாலியின் கொடுமையான வரலாறு முற்றுப்பெற, இரண்டாவது தாலியின் சோக கதை என்னை எதோ செய்தது. சிவா சொன்ன மாதிரியே இருந்தான். சீலனைப்பற்றி ஒருவார்த்தை கூட பேசியத கிடையாது. அவன் ஒரு சாரதி. போதும் போதும் என்ற வருமானம் இருவரும் நின்மதியாய் வாழ்ந்தனர். என்ன தான் சந்தோசம் வந்தாலும் ஆனந்தியின் மனம் நடுவழியில் விட்டு வந்த இரு குழந்தைகளை அவள் இன்னும் மறக்கவில்லை, எப்படி மறக்க தொப்பிள் கொடி உறவென்பது சாதாரனமானதா ஒரு நொடியில் மறந்து விட? அவளது துயரம் தெரிஞ்ச சிவா அவளை வற்புறுத்தவில்லை. என்ன தான் இருந்தாலும் அவனது உதவிக்கு அவளால் முடிந்தது சிவாவிற்கும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்தாள் 2 வருடத்தில். வாழ்க்கை பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்கியது. தனிமையான நேரத்தில் மூத்த பிள்ளைகளை எண்ணி அழுவதும் உண்டு. சீவாவின் குழந்தையில் அந்த குழந்தைகளைப்பார்த்தாள்.

விதி மறுபடி விளையாடியது, வாகன விபத்தொன்றில் சிவா உயிர் தவறியது. விதவைக்கோலம். அன்று தான் சீலன் உயிரோடு இருக்க சீவா இறந்து போனான். " நான் விதவையா சுமங்கலியா.?? எனது நிலை எனக்கே தெரியேல்லை" என்று ஆனந்தி சொன்னபோது என்னவோ செய்தது.

ஒரு குழந்தையுடன் இதே வீட்டில் இருந்தாள். சாதாரனமாயே ஒரு ஆணின் உழைப்பில் ஒரு குடும்பம் ஓடுவது கஸ்டம். யாரைத்தெரியும்? என்ன தெரியும்? பட்டினியாய் பல நாள் கிடந்தாள். அயலவர் பரிதாபத்தில் குழந்தை ஒரு நேரம் வயிராறியது. அப்போது தான் சீலணின் தம்பி கண்ணனின் பரிதாபம் ஆனந்தி மேல் விழுந்தது. அவள் கணவனை விட்டு ஓடி வந்தவள் என்பது அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்திருந்தார்கள். கண்ணன் அவளிற்கு ஆதரவாய் இருந்ததை பலர் பலவாறு பேசினார்கள். பல வருடமாய் அவர்களிற்குள் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. காலம் மாற்றியது, எத்தனை நாள் அவனை எதிர்பார்த்திருப்பது. நேரடியாகவே கேட்டாள், கண்ணன் இனி நீங்கள் எங்களுக்காய் கஸ்டப்படவேண்டாம். நான் திரும்பி ஊருக்கு போறன், என்ன நடந்தாலும் பாக்கிறன். என்ற கண்கலங்கி நிக்க, "நீங்க இனி அங்க போய் என்ன ஆனந்தி செய்யப்போறியள். என்னோட இருந்திடுங்கோ அண்ணாவை மாதிரி இல்லாட்டாலும் உங்களையும் பிள்ளையையும் நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் பட்ட கஸ்டங்களை ஒண்டும் விடாமல் அண்ணா எனக்கு சொல்லியிருக்கிறார்" என்றான். எந்த இலாபமும் இன்றி அவனிடம் எப்படி கடமைப்படுவது. ஒரு துணையின்றி மீதி வாழ்வை எப்படி அவள் கழிப்பது, பல வாறு யோசித்தாள். கடைசியாய் மீண்டும் ஒரு முறை அவனது தாலியையும் ஏற்றுக்கொண்டாள். 2 வருடத்தின் பின்னர் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப்பெற்றெடுத்தாள். வாழ்க்கை ஓடுது கண்ணனுடனும், அவனது குழந்தையுடனும், சீலனின் குழந்தையுடனும். அவளிற்கு 4 குழந்தைகள் 3 கணவன்கள். ஒரு முறை விதவையும் ஆனவள் மறுபடி சுமங்கலி..?? நாளை எப்படி இன்னும் அவளிடம் கேள்விக்குறியே மிச்சம்.

தற்செயலாய் கண்ணனிற்கு ஒன்று நடந்தால் என்ன நிலை என்று கேட்டேன், தலை குனிந்தாள் குற்ற உணர்வோ? "கண்ணன் துணையிருக்க இனியாவது உனது சொந்தக்காலில் நிக்கப்பார். கண்ணீரோடு கதை சொல்லி கறைகளை கரைத்திட முடியாது" என்று கூறிவிட்டு வெளியேறினேன்.

அவள் பற்றி எதை நினைப்பது என்று எனக்கு தோன்றவே இல்லை. பிறப்பிலேயே அவளை முடக்கி விட்ட விதியையா? அவளை கொடுமை செய்த சித்தியையா? சீதனத்திற்காய் அலைந்த சீலணையா? சுயமாய் தனக்கென்றொரு வாழ்வை திடமாய் அமைக்க முடியாது இழுத்தபாட்டிற்கெல்லாம் போக நினைத்த ஆனந்தியையா? யாரைக்குற்றம் சொல்ல?